ஜெ. மறைவு: திண்டுக்கல் சீனிவாசனின் 'லாவணி கச்சேரி'...முதல்வர் எடப்பாடி கடும் அதிருப்தி
ஜெயலலிதா தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தொடர் பேட்டிகளால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ச்சியாக அளித்து வரும் பேட்டிகளாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது, இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என நாங்கள் கூறியது அத்தனையுமே பொய். சசிகலா குடும்பத்தினர் பேட்டி அளிக்க சொன்னதையே அளித்தோம்... மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதன் அதிர்வலைகள் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விவாதம் நீடித்து கொண்டே போகிறது.
இதன் உச்சகட்டமாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் உள்ளிட்டோர்தான் சிக்குவார்கள் என்கிறது தினகரன் தரப்பு. இப்படி தம்மை சுற்றிய சர்ச்சைகள் நீடித்து கொண்டிருப்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லையாம்.
இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசனை அழைத்து இனியும் தொடர்ந்து பேச வேண்டாம் என முதல்வர் எடப்பாடியார் கூறியிருக்கிறார். ஆனால் தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை. இப்போதுதான் சசிகலா குடும்பத்துக்கு சரியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சனையும் வரப் போவதும் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த விளக்கத்தால் முதல்வர் எடப்பாடியார் திருப்தி அடையவில்லையாம். அதேபோல் மூத்த அமைச்சர்கள் பலரும் திண்டுக்கல் சீனிவாசனின் லாவணி கச்சேரியை ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.