வாக்காளப் பெருமக்களே... பஞ்சமி நாளில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா?
சென்னை: மழை வெள்ள பாதிப்பில் சிக்கி பரிதவித்து வந்த மக்களை பார்த்து ஆறுதல் கூறச்சென்ற முதல்வர் ஜெயலலிதா, 'வாக்காள பெருமக்களே'... என்று அழைத்து பஞ்சமி நாளில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. எனதருமை மக்களே உங்கள் அன்பு சகோதரி உங்களைத் தேடி வந்திருக்கிறேன் என்று கூறும் ஜெயலலிதா வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த போது 'வாக்காள பெருமக்களே' என்று அழைத்ததைக் கேட்டு கொஞ்சம் குழப்பத்தையே ஏற்படுத்தியது.
கடந்த 8ம் தேதி முதல் மழையின் தீவிரம் சென்னையை தாக்கியது. 9ம் தேதி கொட்டிய கனமழையில் வடசென்னை பெரும் பாதிப்புக்கு ஆளானது. தீபாவளி திருநாளைக் கூட சரியாக கொண்டாடவில்லை. பலருக்கும் பண்டிகை நாள் என்பதே கூட மறந்து போனது. வெள்ளத்தில் தத்தளித்த மக்களை கண்டு ஆறுதல் கூற ஆளுங்கட்சியினர் யாருமே வரலையே என்று எதிர்கட்சியினர் கேட்கவே மீண்டும் ஒரு பெருமழை சென்னையை தாக்கியது. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலைவரை மழை கொட்டியது.

முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா, தான் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள புது வண்ணாரப்பேட்டை வீரராகவன் தெரு, தண்டையார்பேட்டையில் உள்ள இளைய முதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, எண்ணூர் நெடுஞ்சாலை, கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர், சுண்ணாம்பு கால்வாய், திருவள்ளூர் நகர், கொடுங்கையூர் எழில் நகர்; பகுதிகளில் வேனில் இருந்தபடியே பேசினார்.
|
6 தொகுதிகளில் பிரச்சார பாணி
தேர்தல் பிரச்சார பாணியில் வேனில் இருந்தபடியே பேசிய முதல்வர் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டை ஏரி சந்திப்பு மற்றும் மாதவரம், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார்.

வாக்காள பெருமக்களே
தேர்தல் பிரசார பாணியில், 'வாக்காள பெருமக்களே...' என்ற வாசகத்தை, பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீர்த்துவிட்டது என்றார்.

சேதங்கள் தவிர்க்க முடியாது
மாதக்கணக்கில் பெய்யவேண்டிய மழை இப்படி ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீர்த்துவிட்டால், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும், அதனால் சேதங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது. அப்படித்தான் இங்கேயும் மழைநீர் தேங்கி, சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதை அறிந்தவுடன் அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் இரவு-பகல் என்று பாராமல் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
|
நான் இருக்கேன் கவலைப்படாதீங்க
இங்கு வாழுகின்ற மக்கள் கவலைப்படவேண்டாம். உங்களுக்கு ஆதரவாக, துணையாக நான் இருக்கிறேன். விரைவில் இங்கே சகஜ நிலை திரும்புவதற்கு உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழக அரசு இங்கே பணியாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆகவே கவலை கொள்ள வேண்டாம். விரைவிலேயே இங்கு சகஜநிலை திரும்பிவிடும். உங்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

பிரச்சாரத்தை தொடங்கிவிட்டாரோ?
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. எதிர்கட்சியினர் பலரும் மக்களை மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை செய்தி வரும் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவும் ஜனவரிக்குப் பின்னர் மக்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெள்ள நிவாரணத்தைப் பார்வையிட நல்ல நாளான பஞ்சமி தினத்தில் நல்ல நேரம் பார்த்து பிரச்சார வேனில் வந்தது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஆறு தொகுதிகளில் பேச்சு
சென்னையில் வெள்ளம் பாதித்த ஆறு தொகுதிகளில் ஏழு இடங்களில் பேசிய ஜெயலலிதா வாக்காளப் பெருமக்களே என்று அழைத்து பேச்சை தொடங்கினார். சாமான்ய மக்களும், சாதாரண மக்களும் வாக்காளர்களாக மட்டும்தான் அரசியல் கட்சியினரின் கண்களுக்குத் தெரிகிறது. எனவேதான் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் வெள்ளத்தை சாக்காக வைத்து பணமழையையும், நிவாரண உதவிகளையும் வாரி வாரி வழங்குகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications