ஜெயலலிதாவின் பாதுகாப்பு கார் மோதி வாலிபர் காயம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் கார் அணிவகுப்பில் முன்னால் சென்ற பாதுகாப்புப் படையினரின் கார் மோதி வாலிபர் ஒருவர் காயமடைந்தார்.
ஜெயலலிதா தினமும் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை சாலை வழியாக கோட்டைக்கு சென்று வருவது வழக்கம்.
அவரது காருக்கு முன்பு, பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாரின் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்
மேலும், இந்த கார் அணிவகுப்பு செல்லும் பாதையில் போக்குவரத்தை சரிப்படுத்தி, தடையில்லாமல் வாகனங்கள் செல்லும் பணியை, அணிவகுப்பில் முதலாவதாகச் செல்லும் வார்னிங் காரில் உள்ள போலீசார் மேற்கொள்வர்.
நேற்று இந்த கார் மெரினா கடற்கரையில் உள்ள மாநிலக் கல்லூரிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கலங்கரை விளக்கத்தை நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் திடீரென சாலையில் வலது பக்கமாக திரும்பினார்.
இதனால் அந்த நபர் மீது வார்னிங் கார் மோதியது. ஆனால், அந்த காரை ஓட்டிய காவலர் மிகத் துரிதமாக செயல்பட்டு காரை உடனடியாக நிறுத்தியதால் வாலிபர் லேசான காயத்துடன் தப்பிவிட்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசாரால் கொண்டு செல்லப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் கார்த்திக் (25) என்பதும், தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றுகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.