சபாநாயகருடன் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு
சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு நடத்தினார்.
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் தொடர்பாக சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்றது. அன்று நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

2017-18-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத் தொடரை முடித்து விட்டதால் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற அந்த தீர்மான நகலை சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் அளித்தனர். இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
வரும் ஜூன் 8-ஆம் தேதி பேரவை கூட்டப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் சட்டசபை செயலர் ஜமாலுதீனின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று சபாநாயகர் தனபாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த ஆலோசனை நடத்தினார்.
இவர்கள் பேரவைக் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாகவும், ஜமாலுதீன் பதவிக் காலம் முடிவடைந்தது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications