தமிழக அரசியலில் அதிரடி! ஸ்டாலினின் ராஜினாமா கடிதம் ஏற்பு! வேண்டுகோள் வைத்த ஆளுநர்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ராஜேந்திர கர்லேகருக்கு தனது ராஜினாமா கடிதத்தை ஈமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இந்த ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு 73 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் அதிமுக, திமுக ஆட்சி அமைக்க முடியாது.

அது போல் தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தை அவர் ஏற்றுக் கொண்டார். "புதிய அரசு அமையும் வரை முதல்வர் பதவியில் தொடர வேண்டும்" என ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல், அண்டை மாநிலமான கேரளாவிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று மாலையே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அமைச்சரவைக்கு எதிர்பாராத பலத்த அடி கிடைத்துள்ளது.
அமைச்சரவை சரிவு: திமுகவின் 32 அமைச்சர்கள் மற்றும் 1 சபாநாயகர் என மொத்தம் 33 முக்கிய வேட்பாளர்களில், 15 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் உட்பட 16 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
முதலமைச்சரின் தோல்வி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
வெற்றி நிலவரம்: கடும் போட்டிக்கு இடையே 17 அமைச்சர்கள் மட்டுமே தங்களது தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவின் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகும். தவெக இத்தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தவெக 34.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 1977-ல் அதிமுக முதல் தேர்தலில் பெற்ற 30.40% வாக்கு சதவீதத்தை விட அதிகமாகும்.
முதலமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில், 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஏற்கனவே ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசமும் அவர் கோரியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிந்து, புதியதொரு அரசியல் அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications