ஆளுநரை பின் தொடர்கிறாரா முதல்வர்? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பள்ளிகளில் திடீர் ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீரென பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற கிரண் பேடி, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மக்களிடம் நேரடியாகவும் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, குறைகளை கேட்டறிந்துள்ளார். லாஸ்பேட்டையில் உள்ள வள்ளலார் அரசு பெண்கள் பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வித்துறை செயலாளர் ராகேஷ்சந்திரா ஆகியோர் அவருடன் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிகளின் ஒவ்வொரு அறைகளாக சென்று பார்வையிட்ட அவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, பள்ளி அளைகளை தூய்மையாக வைத்திருப்பதோடு, சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடத்தை மட்டுமே போதிக்காமல், மாணவர்களின் நலனை பேணிகாக்கும் வகையில் உடலை சுறுசுறுப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி, யோகா, உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளியின் தேர்ச்சி விகிதத்த அதிகப்படுத்த ஆசிரியர்கள் கடுமையாக செயல்பட வேண்டும் என முதல்வர் நாரயணசாமி அறிவுறுத்தினார்.