ஆகாயத்தில் பறக்கும் அம்மா!... சொல்வதெல்லாம் சும்மா!!.. போட்டுத்தாக்கும் ஸ்டாலின்
உளுந்தூர்பேட்டை: சட்டசபை தேர்தலில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளைச் செய்யாமல், வாக்களர்களைப் பார்த்து செய்வீர்களா? செய்வீர்களா? என்று ஜெயலலிதா கேட்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் தொகுதி வேட்பாளர் முத்தையன், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மணிமாறன் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கும் இயக்கம் திமுக. தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல. கடந்த தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் ஜெயலலிதா.

இலவச பஸ்பாஸ்
58 வயதானவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறினார். ஆனால் இதுவரை யாருக்காவது பஸ் பாஸ் வழங்கினாரா? இதே போல் ஏழை எளிய மக்களுக்கு 3 சென்ட் இடம் வழங்குவதாக கூறினார். இதுவரையில் வழங்கினாரா?

விலைவாசி உயர்வு
அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவிற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என கேட்டு உங்களை தேடி வந்துள்ளோம். திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

திமுக நலத்திட்டங்கள்
திருவெண்ணெய்நல்லூர், பெரியசெவலை, சித்தலிங்கமடம் ஆகிய பகுதிகளில் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் முத்தையனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திருவெண்ணெய் நல்லூர் பகுதிகளில் நாங்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம்.
இதனால் உங்களிடம் துணிவுடன் ஓட்டு கேட்கிறேன். எதுவுமே செய்யாமல் செய்வீர்களா? செய்வீர்களா? என ஜெயலலிதா கேட்கிறார். மின் கட்டணம், பஸ் கட்டணம், பால்விலை ஆகியவை கடந்த திமுக ஆட்சியில் 10 பைசா கூட உயரவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து பொருளின் விலையும் உயர்ந்து விட்டது.

வீதி வீதியாக வருகிறோம்
நான் உங்களை பார்க்க வீடு வீடாக, தெருத் தெருவாக, வீதி வீதியாக வருகிறேன். ஆனால் அம்மா ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அமைச்சர் முதல் எம்பி, எம்எல்ஏ வரை அனைவரும் அவருடைய காலில் விழுந்து வணங்குவது தமிழ் பண்பாட்டை இழிவு படுத்தும் செயல். எங்கள் வேட்பாளர் முத்தையன் உங்களை பார்த்து வணங்குவதுதான் உண்மையான தமிழ் பண்பாடு.

ஆகாயத்தில் பறக்கும் அம்மா
ஆகாயத்தில் பறக்கும் அம்மாவுக்கு தரையில் நடக்கும் கொலை, கொள்ளை, பலாத்காரம் ஏதும் தெரியவில்லை. எனவே, சிந்தித்து வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications