இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து கொண்டு காவிரி வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி- முதல்வர்
இந்திரா காந்தியின் மிரட்டலுக்கு பயந்து கொண்டு காவிரி வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
திருவாரூர்: காவிரி விவகாரத்தில் மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கு பயந்து கொண்டு காவிரி வழக்கை திரும்ப பெற்றார் கருணாநிதி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூரில் அதிமுக சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் காவிரி பிரச்சினை பூதாகரமாக வெடிப்பதற்கு காரணமே திமுகதான். 1970-ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தமிழகத்குக்கு பாதகமாக அமைய ஆரம்பித்தது.
அப்போதைய முதல்வர் கருணாநிதி கடந்த 1971-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் காவிரிக்காக வழக்கு தொடர்ந்தார். ஆனால் தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக மத்தியில் இந்திரா காந்தி அரசின் மிரட்டலுக்காகவும் 1972-ஆம் ஆண்டு காவிரி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார்.
அன்றிலிருந்து இன்று வரை திமுக காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த 1993-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவிரிக்காக உண்ணாவிரதம் இருந்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட திமுகவும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் முன்வராத போது ஜெயலலிதாதான் அதை அரசிதழில் இடம்பெற செய்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications