ஒரு எதிரி கூட கண்ணுக்குத் தெரியாத இடத்தில் ஸ்டாலின் உள்ளார்.. ஆனால் ஒரு வருத்தமும் இருக்கு.. கனிமொழி
தென்காசி: ஒருசிலர் ஒன்றிய அரசிடம் வளைந்து கொடுத்தே தன்னுடைய நிலையை தக்க வச்சுக்கிட்டாங்க.. சில பேர தன் நாட்டு மக்களுக்காக சாட்டையால் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினை எதிர்க்க ஒரு நல்ல எதிரி கூட இல்லை. இதுவரை ஒரு எதிரிகூட பெயர் சொல்லும் அளவில் இல்லை. ஒரு எதிரி கூட கண்ணுக்கு தெரியாத இடத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி தென்காசியில் நடந்த திமுக கூட்டத்தில் பேசினார்.
தென்காசியில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ஆளுநர் ரவி மற்றும் சீமானை விமர்சித்து பேசினார். கனிமொழி பேசியதாவது:-

சில நேரங்களில் நான் ஸ்டாலினை நினைத்து வருத்தப்படுவது உண்டு. ஸ்டாலினை எதிர்த்து ஒரு நல்ல எதிரி கூட இல்லை. 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இதுவரை ஒரு எதிரிகூட பெயர் சொல்லும் அளவில் இல்லை. ஒரு எதிரி கூட கண்ணுக்கு தெரியாத இடத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார்.
ஆனால் தமிழ் துரோகிகளை எதிர்த்து, தமிழ் மக்களின் தமிழ் இனத்தில் துரோகிகளை எதிர்த்து, தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களை இழிவுபடுத்தக்கூடிய, பெரியாரை இழிவுபடுத்துகின்ற சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் தான் பொழுதுபோக வேண்டும் என்பதற்காக கவர்னரை கொண்டு வந்து வச்சிருக்காங்க. கவர்னர் இல்லையென்றால் ரொம்ப போர் அடிக்கும். ஏனென்றால் அவர் கவர்னர் போல் இல்லை. அரசியல்வாதி போல் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். கவர்னரின் வேலை என்னவென்றே தெரியாமல், நீதிமன்றமே குட்டு வைக்கும் வகையில் அவர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய பல சட்டங்களுக்கு கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் ஆதரித்தார்கள். அவர்களது சொந்த பிரச்சினைக்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டு உரிமையை அடகு வைத்துவிட்டார்கள். நாட்டில் இருக்கிற எல்லா மாநிலத்துக்கு ஒட்டுமொத்தமாக துரோகத்தை இழைத்துவிட்டு இன்றைக்கு டங்க்ஸ்டன் பற்றி பேச என்ன இருக்கிறது. எத்தனை மக்கள் விரோத சட்டங்கள், எல்லாத்தையும் கை கட்டி ஆதரவு கொடுத்துள்ளார்.
அவருக்கு நிமிர்ந்து நின்று பழக்கம் இல்லை. வளைந்து கொடுத்தே பழகியவர்கள். ஒன்றிய அரசிடம் வளைந்து கொடுத்தே பழகி, தங்கள் நிலையை தக்க வைத்துக்கொண்டனர். தேர்தல் என்றால் தான் வெளியில் வருவார். இல்லையென்றால் அவர்கள் வெளியில் வருவதில்லை. இவர்களோடு தான் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொருவர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொள்கிறார். இதுவரை பெயர் சொல்லக்கூடிய எதிரிகூட ஸ்டாலினுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications