அனு ஜார்ஜ் "ரிட்டர்ன்ஸ்".. திரும்பி வந்த டாப் ஐஏஎஸ்.. அப்படியே பறந்த 12 பொறுப்புகள்..ஸ்டாலின் அதிரடி
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் அனு ஜார்ஜ் மீண்டும் தனது பணியில் இணைந்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றதும் தனக்கென்று தனி செயலாளர்களை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்தார். நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வதற்காக அதிக அனுபவம் கொண்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்தார். பல்வேறு துறை ரீதியான பணிகளை கவனிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளை வழங்கினார்.

தமிழக அரசின் 45 துறைகளும் இந்த 4 அதிகாரிகளுக்கும் பிரித்து தரப்பட்டது. அந்த வகையில், முதல் 3 செயலாளர்களுக்கும் தலா 11 துறைகளும், அனு ஜார்ஜுக்கு மட்டும் 12 துறைகளும் ஒதுக்கப்பட்டன. இவர்கள்தான் அந்த துறை ரீதியான பணிகளை கவனித்தனர். முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து ரிப்போர்ட் வழங்கி வந்தனர்.
அந்த குறிப்பிட்ட துறையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர். அந்தந்த துறைகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சம்மந்தப்பட்ட தனது செயலாளரிடம் தான் விசாரிப்பார் முதல்வர். நேரடியாக முதல்வர் ஸ்டாலின் பணிகளை கவனிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற துறை ரீதியான பணிகளை இந்த செயலாளர்கள்தான் கவனித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெர்சனல் லீவ் எடுத்திருந்தார் அனுஜார்ஜ்.
நீண்ட நாள் லீவில் அவர் சென்றதால் அனுஜார்ஜ் கவனித்து வந்த 12 துறைகளும் மற்ற மூன்று செயலாளர்களுக்கும் பிரித்து தரப்பட்டது. அனுஜார்ஜ் லாங் லீவில் சென்றால் அந்த இடத்திற்கு வேறு ஒரு செயலாளரை நியமிக்கலாமே என்று பேச்சுக்கள் எழுந்தன. அதாவது அவர்தான் லீவ் எடுத்துவிட்டாரே.. புதிதாக ஒரு செயலாளரை கொண்டு வரலாமே. அதைச் செய்யாமல் மற்ற 3 செயலாளர்களுக்கும் பிரித்து தரவேண்டுமா? என்று அப்போதே சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் தமிழ்நாடு அரசோ, முதல்வர் ஸ்டாலினோ இங்கு மாற்று அதிகாரியை நியமனம் செய்யவில்லை. இந்த நிலை அப்படியே நீடித்து வந்த நிலையில், லீவ் முடிந்து அனுஜார்ஜ் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இதனையடுத்து, ஏற்கனவே அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மீண்டும் அனுஜார்ஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்த 12 துறைகளையும் கவனித்து வந்த 3 செயலாளர்களிடமிருந்து அந்த துறைகள் எடுக்கப்பட்டுவிட்டன.
பணிக்கு திரும்பியதும் அவருக்கு மாற்றம் இன்றி துறைகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அதில் 5 முக்கியமான அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரின் இடத்தை நிரப்ப போகும் அந்த அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹன்ஸ்ராஜ் வர்மா, விக்ரம்கபூர் , அதுல்யமிஸ்ரா , ஜித்தேந்திரநாத் ஸ்வைன், பிரதீப் யாதவ், கிருஷ்ணன், ராஜாராமன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, நசிமுதின், சிவ்தாஸ் மீனா, அனிதாபிரவீன் ஆகியோரில் ஒருவர் தலைமை செயலாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications