7 தமிழர்களை விடுதலை செய்தால் ஜெ. வரலாற்றில் இடம்பெறுவார்- வைகோ
சென்னை: கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, உள்ளிட்ட 7 பேரை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்ய உத்தரவிட்டால் அவரது பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருடன் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது.
அற்புதம்மாள் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணி 1 மணிக்கு எழும்பூரில் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்தது.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ் கண்ணா, நடிகர் சத்யராஜ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முடிவு செய்துள்ளார். மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்ய கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.
7 பேரை விடுவிக்க தமிழக அரசு முன் வந்தாலும் மத்திய அரசு தடை செய்யக்கூடாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரை சிறையில் வைத்திருப்பது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டது' என்று பழ.நெடுமாறன் கூறினார்.
இந்த பேரணி குறித்து கருத்து தெரிவித்த வைகோ, சிறையில் வாடும் 7 தமிழர்களை முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்தால் அவரது பெயர் வரலாற்றில் இடம் பெறும் என்றும் உலகத்தமிழர்கள் அனைவரும் அவரை வாழ்த்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது தேவையற்றது என்றும் வைகோ தெரிவித்தார்.
சென்னையில் இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதாகவும் சிகிக்சையில் இருப்பதால் தன்னால் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாகவும் வைகோ கூறினார். தனக்கு பதிலாக மல்லை சத்யா உடன் ஏராளமான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். 7 தமிழர்கள் விடுதலைக்காக உலகத்தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பின்னால் நிற்பார்கள் என்றும் துணிச்சலுடன் அவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் வைகோ கூறினார்.