மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடத்திற்கு 'பிளான்' அனுமதி வழங்கிய அத்தனை பேரும் அதிரடி மாற்றம்!
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்து 61 பேரின் உயிரைப் பலி வாங்கிய 11 மாடிக் கட்டடத்திற்கு திட்ட அனுமதி வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் அனைத்து அதிகாரிகளும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் துறையின் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் உள்பட 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிஎம்டிஏ அதிகாரிகள் மீது புகார்
இந்தக் கட்டட விபத்தைத் தொடர்ந்து ஏரிக் கால்வாய் இருந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கட்ட அனுமதி கொடுத்த சிஎம்டிஏ அதிகாரிகள் கடும் கண்டனத்துக்குள்ளானார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்தன.

நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்
இதையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷனை அறிவித்தது.

அஸ்திவாரம் சரியில்லை
இந்தக் கமிஷன் தனது விசாரணை அறிக்கையை சமீபத்தில் அரசிடம் சமர்ப்பித்தது. அதில் சரியில்லாத அஸ்திவாரம் போட்டதும், கார் பார்க்கிங்குக்கான தூண்களை அகற்றியதுமே கட்டடம் சரிந்து விழ முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையின் ஆய்வறிக்கை
இதற்கிடையே, மாநகர காவல்துறையும் தனது காவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை வழக்கு விசாரணையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் சிஎம்டிஏ அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இடமாற்றம்
இந்த நிலையில், மவுலிவாக்கம் கட்டடத்திற்கு கோப்புகளை இறுதி செய்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும சென்னை திட்ட அதிகாரி முதல் உதவியாளர் வரை அனைவரும் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications