பிரதமர் மோடி வருகைக்கு முன்பாக வெளியான பரபர அறிவிப்பு.. காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் ரத்து!
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவதற்கு முன்பாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில், வடசேரி, சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. தமிழக விவசாயிகள் மற்றும் பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.' எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வரவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக, நிலக்கரி சுரங்க டெண்டர் கைவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications