மாயமான கடலோர பாதுகாப்புப் படை விமானம் எங்கே? 10 படகுகள் தீவிர தேடுதல்! 3 பேரின் நிலை என்ன?
கடலூர்: கடலூர் அருகே மாயமான கடலோர பாதுகாப்புப் படைக்கு சொந்தமான குட்டி விமானமான டோர்னியரை 10 படகுகள் தொடர்ந்து தேடி வருகின்றன. இந்த விமானத்தில் இருந்த 3 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.

கடலோர பாதுகாப்புப் படையின் டோர்னியார் குட்டி விமானமானது சென்னையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தமிழக கடற்பரப்பு மற்றும் பாக்ஜலசந்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

இரவு 9.23 மணியளவில் சென்னையில் இருந்து தெற்காக 95 நாட்டிக்கல் மைல் தொலைவில் காரைக்கால் கடற்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது திருச்சி ரேடார் கண்காணிப்பு நிலையத்தில் இதன் சிக்னல் கடைசியாக பதிவானது.
அதன் பின்னர் விமானம் என்னவானது என்பது தெரியவில்லை. இந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர். அவர்களது கதி என்ன என்றும் தெரியவில்லை.
10 படகுகள்..
மாயமான விமானத்தை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு படை, கடற்படையின் கப்பல்கள், கண்காணிப்பு விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா கூறுகையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விமானம் மாயமாகி உள்ளது. இதைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் கடலோர காவல் குழுமத்தின் தலைவர் சைலேந்திரபாபு கூறுகையில், மாயமான விமானத்தை 10 படகுகள் தேடி வருகின்றன.. ஒரு படகுக்கு 5 வீரர்கள் என மொத்தம் 50 பேர் விமானத்தை தேடி வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications