குழந்தைகள் சைக்கிள் டயரில் வைத்து கடத்தப்பட்ட 1.6 கிலோ தங்கம் கோவை ஏர்போர்ட்டில் பறிமுதல்
கோவை: குழந்தைகளுக்கான சைக்கிள் டயரில் மறைத்து வைத்து ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.6 கிலோ தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகரியா. அவர் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் இன்று அதிகாலை கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். முன்னதாக ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குழந்தைகளுக்கான சைக்கிளில் உள்ள 3 சக்கரங்களில் வைத்து ஜகரியா 1.6 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன் ஜகரியாவை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரிடம் இருந்து 1.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications