தனக்குத்தானே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்ட பாஜக பிரமுகருக்கு கத்திக் குத்து -2 பேர் கைது
கோவை: கோவையில் தன் வீட்டின் மீது தானே பெட்ரோல் வெடிகுண்டு வீசி நாடகமாடிய பாஜக பிரமுகர் ராமநாதன் என்பவரை 2பேர் கத்தியால் குத்தினர். இதையடுத்து அந்த இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 26 ம் தேதி அன்று தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி விட்டு, மர்ம நபர்கள் வீசியதாக ராமநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி விட்டு, மர்ம நபர்கள் வீசியதாக ராமநாதன் பொய் புகார் கொடுத்து தெரிய வந்தது. இதனையடுத்து, ராமநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராமநாதன், ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து, கோவை வேளாண் பல்கலைக் கழக நுழைவாயிலின் அருகே இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின் தொடர்ந்து வந்த பாஜக இளைஞர் அணித் தலைவர் விஜயகுமார் மற்றும் பாஜக உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் ராமநாதனை நிறுத்தி, உனது வீட்டில் நீயே பெட்ரோல் குண்டை வீசி நாடகமாடி, பாஜகவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பும் கடும் வாக்குவாதம் புரிந்தனர். இது பின்னர் தாக்குதலாக மாறியது. விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமநாதனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த ராமநாதனை, பொது மக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பிய விஜயகுமார் மற்றும் ரமேஷை கைது செய்தனர்.
பாஜகவினருக்குள் நடந்த இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications