டிவி விவாதத்தில் பேசியதில் தவறு இல்லை: இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு
இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
Recommended Video
கோவை: தனியார் தொலைகாட்சி விவாதத்தில், பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
அரசாங்கதால் கருத்துரிமையை பறிக்கும் சமீபத்திய கைதுகளை நீதிமன்றம் ஏற்காமல், நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும் என அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் தனியார் தொலைகாட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குநர் அமீர் மீது, நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் அமீர் மீது வழக்கு போடப்பட்டது. இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீர்க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜாராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, இன்று பீளமேடு காவல்நிலையத்தில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்நிலையத்தில் அமீர் விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் பேசியதாவது:
தொலைக்காட்சியில் கலந்து கொண்டதன் நோக்கம் , என் தரப்பில் பேசப்பட்டது மற்றும் எதிர் தரப்பில் பேசியது குறித்து காவல் துறையிடம் விளக்கம் அளித்தேன். நிகழ்ச்சியின்போது என்னை தாக்க வந்தவர்கள் தொடர்பாக பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். விவாதத்தில் 'அமீர் பேசியதில் என்ன தவறு உள்ளது?' என இன்று முன்ஜாமீன் வழங்கிய நீதிபதியும் கேட்டு இருக்கிறார். தன் மீது எந்த தவறும் இல்லை.
சமீபத்திய அனைத்து கைதும், கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவை. இவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமீர் கூறினார்.