நடவடிக்கை சரிதான்... ஆனால்? - கோவை திமுக உடன்பிறப்புகளின் குமுறல்
கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் மீது ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை சரிதான், ஆனால் தற்போது நியமிக்கப்பட்டவர்களில் பலர் களத்தில் இறங்கமாட்டார்களாம்.
Recommended Video
கோவை: அறிவாலயத்தில் நடத்தப்பட்ட தன்னந்தனி ஆய்வுக்குப் பிறகு கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ' நடவடிக்கை சரியானதுதான். ஆனால், தற்போது நியமிக்கப்பட்டவர்களில் பலரும் களத்தில் வேலை பார்ப்பவர்கள் அல்ல' என்ற பொருமல் எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோன பிறகு, கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் இறங்கினார் செயல் தலைவர் ஸ்டாலின். தொண்டர்களுடன் விவாதம், மதிய உணவு என அசத்தினார். ' உங்கள் புகார்களின் மீது பத்து நாட்களில் நடவடிக்கை எடுப்பேன்' என உறுதியளித்தவர், சீனியர்களின் நிர்பந்தத்தால் நடவடிக்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளை மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையால் தொண்டர்கள் மீண்டும் சோர்ந்து போய் உள்ளனர்.
கோவை மாநகர உடன்பிறப்பு ஒருவரிடம் பேசினோம். " கோவை மாநகர் மாவட்ட செயலாளராக முத்துச்சாமி இருக்கிறார். இவருடைய ஆதரவில் புதூர் பகுதிக்கு சண்முகசுந்தரமும் பெரியகடை வீதி பகுதிக்கு மார்க்கெட் மனோகரனும் காந்திபுரம் பகுதிக்கு சேதுராமனும் நியமிக்கப்பட்டனர். இதில், மனோகரனும் சேதுராமனும் களப்பணியில் வல்லவர்கள் அல்ல.
கட்சி அறிவிக்கும் எந்தப் போராட்டத்திலும் இவர்களின் பங்களிப்பு பெரிய அளவுக்கு இருந்ததில்லை. கடந்த தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட மீனா லோகுவின் ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர். அவருக்குச் சரிவர தேர்தல் வேலை பார்க்காத சண்முக சுந்தரத்தைப் பகுதிப் பொறுப்பாளராக நியமித்துள்ளனர்.
மீனா லோகு ஆட்கள் புறக்கணிக்கப்படக் காரணம், ' தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அவர் போட்டிக்கு வந்துவிடக் கூடாது' எனத் திட்டம் போட்டுச் செயல்பட்டுள்ளனர். தற்போது நியமிக்கப்பட்ட சிலர், பணம் கொடுத்துத்தான் இந்தப் பதவிக்கு வந்துள்ளனர் என்பதை உறுதியாகக் கூற முடியும். இதனால் வரக் கூடிய தேர்தலில் உற்சாகத்துடன் தொண்டர்கள் வேலை பார்ப்பது கடினம்தான்" என்கிறார்.