ஆன்லைனில் விற்பனையாகும் நம்ம ஊர் சணல் கயிறு கட்டில்... விலை எவ்ளோ தெரியுமா?
நம்ம ஊரில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் சணல் கயிறு கட்டிலை ரூ. 58 ஆயிரத்துக்கு ஆன்லைனில் விற்கிறார்கள்.
சென்னை: நம்ம ஊர் கயிறு கட்டில்கள் ஆன்லைனின் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் விலை 900 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 58,558 ரூபாய் பாஸ்!
மர நிழலில் வீட்டு முன்பாக கயிறு கட்டிலில் காற்றாட படுத்து உறங்குவதே தனி சுகம்தான். இப்போது எல்லாம் மூடப்பட்ட அறையில் ஏசி போட்டுக்கொண்டு படுத்து உறங்குகிறோம்.
கயிற்றுக் கட்டில் உடல் எடைக்கு தகுந்தாற் போல் வளைந்து கொடுக்கிறது. அதனால் அவற்றில் நீண்ட நேரம் படுத்தாலும் உடல் வலி தெரியாததுடன் நல்ல உறக்கமும் ஏற்படுவதே இக்கட்டில்களை மக்கள் வாங்குவதற்கு காரணம்

மூங்கில் - கடசல்
மூங்கில் மற்றும் கடசல் கட்டில் என கயிற்றுக் கட்டிலில் இரு வகை உண்டு. கடசல் என்பது மரச்சட்டத்தால் செய்யப்படும் கட்டில். இந்த கட்டிலின் எடை அதிகமாக இருக்கும். வாகை, வேம்பு மரங்களில் கடசல் கட்டில்களுக்கு தேவையான சட்டம் தயார் செய்யப்படுகிறது.

அதிகபட்சம் ரூ. 1200தான்
மூங்கில் கட்டில் சட்டம் மட்டும் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதில் கயிறு கட்டினால் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அதுபோல் கடசல் கட்டில் சட்டம் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் கயிறு பின்னினால் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

சணல் நூல் கொண்டு பின்னப்படும் கட்டில்
ஆறடி நீளம், மூன்றரை அடி அகலம் மற்றும் ஐந்தே முக்கால் அடி நீளம், மூன்றரை அடி அகலம் ஆகிய இரு சைஸ்களில் வழக்கமாக கட்டில்கள் தயார் செய்யப்படுகிறது. கட்டில்களுக்கு தேவையான சட்டம் தயார் செய்தபின் சணல், நூல் கயிற்றைக் கொண்டு அவை பின்னப்படுகிறது.

மெத்தையில் கிடைக்காத தனி சுகம்
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்கப்படும் மெத்தைகளில் கிடைக்காத சுகம், இக்கயிற்றுக் கட்டில் படுத்து உறங்குவதன் மூலம் கிடைக்கும் என்பதே, இவற்றை மக்கள் வாங்குவதற்கு காரணம். பல்வேறு பரிணாம வளர்ச்சி கண்டபோதிலும் இன்றைக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் கயிற்றுக் கட்டில்களை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

58,000 விலையில் கயிற்றுக் கட்டில்கள்
நம்ம ஊர் கயிறு கட்டிலின் மகிமையை அறிந்துதான் வெளிநாட்டினர் அவற்றை ஆன்லைனின் விற்பனை செய்கின்றனர். விலை 900 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது ரூ. 58 ஆயிரத்து சொச்சம்.. ஆத்தாடி!
கயிற்றுக் கட்டிலின் மகிமையை உணர்த்திய கமல்!
கயிற்றுக் கட்டிலை பார்க்கும் போதெல்லாம் சகலகலா வல்லவனில் கமலும் அம்பிகாவும் ஆடிப் பாடிய அந்த நிலாக் காயுது டூயட் பாடல் நினைவுக்கு வராமல் போகுமா.. ஆனால் என்ன செய்வது.. கொசுக்கடிக்கு பயந்து பலரும் கதவை பூட்டிக்கொண்டு ஏசியைப் போட்டு நோய் நொடிகளை இலவசமாக வாங்கி வருகிறோம்!












Click it and Unblock the Notifications