துப்பட்டாவில் தூக்கு மாட்டி கல்லூரி மாணவி தற்கொலை… பண்ருட்டியில் பரபரப்பு
கல்லூரி மாணவி தூக்கி தற்கொலை செய்து கொண்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி: பண்ருட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. அருகிலுள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்த இவர், வீட்டின் அருகே வசிக்கும் நிஷாகர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோர்களுக்கு தெரிய வர வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திவ்யாவை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். திவ்யா தன் காதலில் பிடிவாதமாக இருந்ததால், படிப்பு முடிந்ததும் நிஷாகரையே திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அப்பகுதியில் உள்ள நீர்தேக்கத் தொட்டியில் உள்ள படிக்கட்டில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு திவ்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திவ்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, திவ்யாவின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை அருகில் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், திவ்யாவின் மரணத்தில் அவரின் காதலரான நிஷாகர் மீது சந்தேகம் உள்ளதாகவும்,எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
திவ்யாவின் உறவினர்கள் கொடுத்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல் ஆய்வாளர் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டு திவ்யாவின் உறவினர் கலைந்து சென்றனர்.