கொய்யா காய்க்காக சண்டை- புதுகையில் கல்லூரி மாணவி அடித்துக் கொலை
புதுகை: புதுக்கோட்டை மாவட்டம், உய்யக்குடிப்பட்டியில் கொய்யா காய்க்காக கல்லூரி மாணவி ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் ஊராட்சி உய்யக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கோகிலா. இவர் புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் கொய்யாக்காய் பறிப்பதில் கோகிலாவுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் கல்லால் தாக்கி கோகிலாவை அவரது உறவினர்கள் கொலை செய்துள்ளனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு கொய்யா மரத்திற்காக கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.