நீட்.. பெசன்ட் நகரில் திடீரென ஒன்றுகூடி போராடிய கல்லூரி மாணவர்கள்! போலீஸ் அதிர்ச்சி
சென்னை : அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மாணவர்கள் திடீரென கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூரில் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை தடுத்து நிறுத்தும் விதமாக கல்லூரிகளுக்கு நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று வாரவிடுமுறை நாள் என்பதால் மாணவர்களின் போராட்டங்கள் பொதுஇடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் மாணவர்கள் ஒன்று திரளக் கூடும் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சில மாணவர்கள் ஒன்று திரண்டனர். அனிதாவின் படத்தை கையில் ஏந்தி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கலைந்த செல்லுமாறு வலியுறுத்தினர், எனினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications