காவிரியில் கூடுதல் நீரை திறக்க வலியுறுத்தி களமிறங்கிய தமிழக விவசாயிகள்!
தஞ்சாவூர்: காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூரில் வருகின்ற 16ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடியை தொடங்குவதற்கு ஏற்ப தினசரி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீரும், கபிணி அணியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரானது நாளை மேட்டூர் வந்துசேரும் என்று தெரிகிறது.
ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இந்நிலையில், காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூரில் வருகின்ற 16ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் காவிரி விவகாரம் தமிழகத்திலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
போராட்டத்தின் போது, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், 13 டி.எம்சி நீர் போதாது என்பதால் கர்நாடகவிடம் கூடுதல்நீரை பெற்று தர தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உட்பட பல்வேறு தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலத்தில் வருகின்ற 9 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எந்த சரக்கு லாரிகளும் அங்கு செல்ல வேண்டாம் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications