திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் - முத்தரசன்
திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என முத்தரசன் கூறியுள்ளார்
சென்னை: திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழக அரசு அதற்கு முன்வராத நிலையில், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் திமுக நாளை கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரித் தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம். திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என தெரிவித்தார். ஏற்கனவே காவிரி பிரச்சனைக்காக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டுள்ளோம் எனவும் முத்தரசன் கூறினார்.