நில விற்பனை மோசடி... தா.பாண்டியன் மீது இ.கம்யூ., மா.செ. புகார்! - திருச்சி போலீஸ் விசாரணை!
திருச்சி : சௌத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியனிற்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள இடத்தை வெறும் ரூ. 20 லட்சத்திற்கு விற்றதாக தா.பாண்டியன் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 1974ம் ஆண்டில் இருந்து சௌத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன் செயல்படாமல் உள்ளது. அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யாரும் தற்போது உறுப்பினராகவும் இல்லை, ஒருசிலர் உயிருடனும் இல்லை.

இந்நிலையில், இந்த சங்கத்திற்கு சொந்தமான திருச்சியில் இருந்த 5 ஆயிரம் சதுர அடி மனை, சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ரபிக் என்பவருக்கு விற்கப் பட்டது. இந்த மனையின் மதிப்பு ரூ. 3 கோடி எனக் கூறப்படுகிறது. ஆனால், அதனை ரூ. 20 லட்சத்திற்க்கு கிரயம் செய்து கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனு அளித்தார். அதன்படி, இந்த மனை கிரயம் செய்து கொடுக்கப் பட்டதில் முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியனுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தா.பாண்டியன் மீது சேகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சேகர் கூறுகையில், ‘தொழிலாளர்கள் சங்கத்திற்கு உரிய இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த தா.பாண்டியன் மற்றும் அதனை வாங்கிய ரபீக் அகமது, பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டது. புதன்கிழமை அது தொடர்பான விசாரணை திருச்சி நில அபகரிப்பு பிரிவில் நடைபெற்றது.
கடந்த 8ஆம் தேதி திருச்சி போலீஸ் கமிசனர் சஞ்சய் மாத்தூரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், திருச்சி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் புகழேந்தி, இன்ஸ்பெக்டர் சேரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.
அவர்கள் என்னை விசாரிக்க அழைத்தனர். இந்த மனை விவகாரத்தில் மணி என்பவர் சிவில் வழக்காக தொடர்ந்துள்ளார். நீங்கள் கிரிமினல் வழக்கு என கூறுகிறீர்கள் என கேட்டனர். நாங்கள் மனை விற்றது ஒரு மோசடி செயல் என்று கூறியுள்ளோம். தா.பாண்டியன் மாநில செயலாளராக இருந்தபோது இந்த இடம் விற்கப்பட்டது. அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று கோரினோம். அதற்கு தா.பாண்டியனிடம் இதுகுறித்து விசாரிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications