வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறாங்க: அமைச்சர் செல்லூர் ராஜு மீது சிபிஎம் வேட்பாளர் புகார்
மதுரை: மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் செல்லூர் ராஜு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ. வாசுகி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சர் செல்லூர் ராஜு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ. வாசுகி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மதுரை மாநகராட்சி 100-வது வார்டில் வேட்பாளர் செல்லூர் ராஜு வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பறக்கும் படை அலுவலர்களுக்குப் புகார் தெரிவித்தனர்.
ஒன்றரை மணி நேரம் கழித்தே பறக்கும் படை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் அப்பகுதியைவிட்டு அதிமுகவினர் சென்றுவிட்டனர். பறக்கும் படையினர் உடனடியாக வந்திருந்தால், பணம் பட்டுவாடா செய்தவர்களைப் பிடித்திருக்க முடியும். ஆகவே, இதுபோன்ற புகார்கள் வரும்போது பறக்கும் படை குழுவினரை விரைந்து செயல்பட அறிவுறுத்த வேண்டும்.
அப்போது தான் அதன் நோக்கம் நிறைவேறும். அதோடு, பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலின்போதே ஆளுங்கட்சியான அதிமுக பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டது. இப்போதும் அந்த விதிமீறல்கள் தொடர்கின்றன. அதைத் தடுத்து நியாயமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.