எவன்டா இங்க கண்டக்டர்? ஏதோ டிக்கெட் கேட்டியாமே? டிக்கெட் கேட்ட கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு!
திருக்கோவிலூர்: திருவண்ணமலையில் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டர் டிக்கெட் கேட்ட காரணத்தினால் அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூருக்கு ஒரு தனியார் பஸ் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது. திருக்கோவிலூர் அருகே மணலூர் பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் வந்ததும் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த குணசேகரன், தனசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோர் பஸ்சில் ஏறினர்.
பஸ் கண்டக்டரான பண்ருட்டி நத்தம் பகுதியை சேர்ந்த ஏழுமலை பஸ்சில் ஏறிய 3 பேரிடமும் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டர் ஏழுமலையிடம் தகராறு செய்தனர்.
இந்த நிலையில், பிள்ளையார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும் குணசேகரன் உள்பட 3 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி செல்ல முயன்றனர். இதனை கண்டக்டர் ஏழுமலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து ஏழுமலையை சரமாரியாக தாக்கி பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே குணசேகரன் வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து கண்டக்டர் ஏழுமலையை வெட்டினார். இதில் ஏழுமலைக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மணலூர் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து குணசேகரன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications