காங்கிரஸ் தனித்தே வலுவான கட்சியாக உருவெடுக்கிறது: ஜி.கே. வாசன்
பழநி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்தே வலுவான கட்சியாக உருவெடுக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
பழநி- திருச்செந்தூர் ரயில் சேவையை தொடங்கி வைத்து ஜி.கே.வாசன் பேசியதாவது:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் 9 ரயில்கள் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் பாதைகள், அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு பழநியிலிருந்து திண்டுக்கல், மதுரை, சென்னை, திருச்செந்தூர் என நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வடமதுரை ரயில் நிலையம் வழக்கம் போல் செயல்படும். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை தனிநடைபாதை அமைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தனித்து செயல்படுவது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் தனிக்கட்சியாக வலுவடைந்து வருகிறது.
தற்போது, எந்த கட்சிக்கும் முழுமையான கூட்டணி ஏற்படவில்லை. காங்கிரஸ் ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகள் மற்றும் பிறகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.