ஏற்காடு தேர்தல்.. திமுகவை ஆதரிக்காமல் 'நரசிம்மராவாக மாற' காங்கிரஸ் முடிவு!
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்காமல் 'நரசிம்மராவை போல' மவுனம் சாதிக்க காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சி திமு, சமத்துவ மக்கள் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கோரி கடிதம் அனுப்பி வைத்தது.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிடமும் திமுக ஆதரவு கோரியிருந்தது. அதாவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக அணியில் இணைவதற்கான வாய்ப்பை உருவாக்கவே திமுக இந்த நிலையை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.
இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் திமுக பாணியிலேயே தாங்களும் கூட்டணி வியூகம் வகுக்க வேண்டும் என்று மேலிடத்தை தமிழக காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.
காங்கிரஸ், பாஜகவுக்கு திமுக வாசலை திறந்து வைத்திருப்பது போல காங்கிரஸும் திமுக- அடிமுக இரண்டுக்குமே வாசலை திறந்து வைக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியினரின் நிலை.
தற்போதைய ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தால் அதிமுகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்துவிடுவதே நல்லது என்பது காங்கிரஸின் நிலைப்பாடு.
திமுகவினரும் கூட காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாலே போதும் என்ற நிலையில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆக நரசிம்மராவைப் போல மவுனமாக இருக்க முடிவு செய்துவிட்டது காங்கிரஸ் கட்சி!