காங்கிரஸின் ஒரே ஒரு மேயர்.. ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்து ராமருக்கு தீர்த்தம்.. கொந்தளித்த காங்கிரசார்!
கும்பகோணம்: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்குப் புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கும்பகோணம் காங்கிரஸ் கட்சி மேயருக்கு கண்டனம் தெரிவித்து, கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் கும்பகோணம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளில் திமுக மேயர்கள் உள்ளனர். ஒரே ஒரு மாநகராட்சி மேயர் பதவி மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதுதான் கும்பகோணம் மாநகராட்சி.

இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிக்காக, கும்பகோணம் மகாமகம் குளத்திலிருந்து புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், புனித நீர் அடங்கிய குடத்தைத் தூக்கிக்கொண்டு இந்து அமைப்பினருடன் பேரணியாகச் சென்றார்.
காங்கிரஸ் மேயர், ராமர் கோவில் பணிக்காக இந்து கூட்டமைப்பினருடன் சேர்ந்து புனித நீர் குடம் தூக்கிச் சென்றது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் மேயரின் செயலைக் கண்டித்து தற்போது கும்பகோணம் நகரம் முழுவதும் மாநகர காங்கிரஸ்' எனக் குறிப்பிட்டு, நான்கு கட்சி பிரமுகர்கள் பெயர்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில், "காங்கிரஸ் தலைமையே நடவடிக்கை எடு!" எனத் தலைப்பிட்டு, "எம்மதமும் சம்மதம் என்கிற காங்கிரஸ் கட்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ் கும்பலுடன் சேர்ந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தீர்த்த குடம் சுமந்த விசுவாசமற்ற குடந்தை மேயர் மீது நடவடிக்கை எடு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் கும்பகோணம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications