மேலாண்மை வாரியம்: கர்நாடக மத்திய அமைச்சர்களின் நெருக்கடிக்கு மோடி அரசு பணிவதா? காங். கண்டனம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதன் மூலம் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் நெருக்கடிக்கு மோடி அரசு பணிந்துவிட்டது என்பது தெரிகிறது என்று தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 30ம் தேதி சுப்ரீம் கோர்ட் இம்மாதம் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் 1ம் தேதியே உறுப்பினர் பட்டியலை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நாளைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடைசி நாள் என்ற நிலையில், இன்று மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா கூறியதாவது.
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். அவர்கள் கடும் நெருக்கடியை மோடி அரசுக்கு கொடுத்து இந்த முடிவை எடுக்க வைத்துள்ளனர். இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். தமிழகத்திற்கு காவிரியின் மீது உள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். தமிழகதிற்குரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும். கர்நாடகம் என்பது 1956ல் மொழிவாரிய மாநிலங்கள் அமைக்கும் போது உருவான ஒரு மாநிலம் அதற்கு முன்பிருந்தே காவிரி இருந்து வருகிறது என்பதை கர்நாடகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கோபண்ணா தெரிவித்துள்ளார்.