வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நக்மா பிரச்சாரம் !
சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக விரும்பினால் அவர்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்புவதாக மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என அதிகாரப்பூர்வமாக முடிவாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் அண்மையில் அறிவித்தார். இதனிடையே தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவும் பெறப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுடன் இன்று நக்மா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான ஆட்சியில் விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்து விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, வியாபம் ஊழல் மற்றும் லலித் மோடி விவகாரங்களை மறந்து விட்டு பேசுவதாக நக்மா தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.என்றும் கூறினார். மேலும் திமுக விரும்பினால், திமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய விரும்புவதாக நக்மா தெரிவித்துள்ளார்.