தோற்கப் போகும் தொகுதிக்கு காங்கிரஸில்தான் எத்தனை மல்லுக்கட்டு...!
சென்னை: 40 தொகுதிகளிலும் நிச்சயம் தோல்வி என்பது காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் டெல்லி தலைவர்கள் வரை நன்றாகவே தெரியும். இருப்பினும் முக்கியத் தொகுதிகளைப் பெற காங்கிரஸாரிடையே கடும் சண்டையே நடந்து வருவதுதான் ஆச்சரியப்படுத்துகிறது.
இதற்கு குறிப்பிட்ட என்ன காரணம் என்பதை அறிய முடியவில்லை. ஆனாலும் தேர்தல் பிரசார செலவுக்காக கட்சி மேலிடம் கொடுக்கும் பெரும் பணமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியத் தலைவர்களே போட்டியிட முன்வராத நிலையில் சின்னச் சின்னத் தலைவர்கள் எல்லாம் குய்யோ முறையோவென்று போட்டி போட சீட் கேட்டு தள்ளுமுள்ளில் குதித்துள்ளனராம்.

40 தொகுதிகளிலும் போட்டி
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் என 40 தொகுிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கூட்டணி ஏதும் இல்லை. தனியாகவே போட்டியிடுகிறது.

30 வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 பெயரை அறிவித்து விட்டனர்.

ஏகப்பட்ட அடிதடி
ஆனால் இதில் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பாக அதிருப்தி, கண்டனம், போராட்டம் என போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக தென்காசி உள்ளிட்ட சில தொகுதிகளில் வேட்பாளரை மாற்றக் கோரி குரல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

சொச்சம் 9 தொகுதிகளுக்கு எப்பப்பா
அடுத்து மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இவர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரிக்கு வந்த கிராக்கி
இந்த 9 தொகுதிகளில் கன்னியாகுமரிக்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். ஏகப்பட்ட பேர் சீட் வாங்க அலை மோதுகின்றனராம்.

விஜயதாரணியும்
இவர்களில் விஜயதாரணியும் ஒருவராம். இவர் தற்போது சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் போக வசந்தகுமார். பிரின்ஸ், ராபர்ட் புரூஸ், சன் என்ஜீனியரிங் குழும தலைவர் தயாபரன் ஆகியோர் கடுமையாக மோதி வருகிறார்களாம்.

எப்படியும் பிடிச்சிரனும் மக்களே...
குமரி தொகுதியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று விஜயதாரணி கடுமையாக முயன்று வருவதாக தெரிகிறது. மணிசங்கர அய்யரின் உதவியையும் அவர் நாடியுள்ளார். அவரும் முயன்று வருகிறாராம்.

கரூரைப் பிடிப்பாரா ஜோதிமணி
இதேபோல கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரூ. 10 கோடியாம்ல
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை பிரசாரச் செலவுக்காக கட்சித் தலைமை கொடுக்கவுள்ளதாக ஏற்கனவே ஒரு பேச்சு உள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications