'சிதம்பரம் கட்சியை விட்டு போனால் கவலையில்லை...': கார்த்தி சிதம்பரம் மோதலால் ஈ.வி.கே.எஸ். அதிரடி
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியை விட்டு போனால் கவலையில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே, அவர் அப்படி தெரிவித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் சமீபத்தில், சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில், காங்கிரசில் உள்ள தன் ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் 'ஜி - 67' என்ற அமைப்பையும் துவக்கினார்.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு, கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சி நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், அந்த நோட்டீசுக்கு வரும், 30ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், 'கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்' என்றும் அதில் எச்சரிக்கப் பட்டிருந்தது.
கார்த்தி சிதம்பரமோ, 'நான் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்; என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை. அத்துடன், இளங்கோவன் அனுப்பியதாக சொல்லப்படும் நோட்டீஸ் எனக்கு வரவில்லை' என, பதிலடி கொடுத்தார்.
இந்தப் பிரச்னையால், இளங்கோவன் மீது கோபமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சிவகங்கை மாவட்டத்தில், த.மா.கா., தலைவர் வாசனை, ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''சிதம்பரம், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினால், கவலையில்லை,'' எனக் கூறினார். இது காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது தொடர்பாக இளங்கோவன் அளித்த பேட்டியின் விபரமாவது:-
த.மா.கா.,வில் சிதம்பரம் இணைவாரா என்பது குறித்து அவரோ, வாசனோ தான் சொல்ல வேண்டும்.காங்கிரசை விட்டு யார் வெளியேறினாலும், கட்சி கவலைப்படாது. ஈ.வெ.ரா., ராஜாஜி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள், காங்கிரசை விட்டு வெளியேறிய போது கூட, காங்கிரஸ் கவலைப்படவில்லை.
கார்த்தி சிதம்பரம் தன்னை முன்னிலைப்படுத்தி ஜி - 67 என்ற கூட்டத்தை நடத்திஉள்ளார். அந்த கூட்டத்தின் நோக்கம் தவறானது. 'காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்' என கார்த்தி அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதில், யாருக்கும் உடன்பாடில்லை.
காமராஜரைப் போல ஒப்பற்ற தலைவருக்கு பின், தமிழக காங்கிரசில் மக்கள் தலைவர் யாரும் இல்லை. கார்த்தி யாரை மனதில் வைத்து, முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுகிறார் என பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காங்கிரசுக்கு ஓட்டு போடுகிற தொண்டனும் ஓட்டு போட மாட்டான்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.