ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை: ஈ.வி.கே.எஸ். அறிவிப்பு
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறைதண்டனை பெற்றதைத் தொடர்ந்து, அவரது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் ஆனந்தும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுப்பிரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிடுகிறார்கள்.
இதில் வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பா.ஜ.க.) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பணியையும் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில் நடிகர் டி. ராஜேந்தரின் லட்சிய தி.மு.க.வும் போட்டியிட உள்ளது.
ஆனால் ம.தி.மு.க, பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடாததோடு யாருக்கும் தங்கள் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடப் போவதில்லை என்றும், வேறு கட்சிகள் எதற்கும் ஆதரவும் அளிக்கப் போவதில்லை என்றும்' அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என எண்ணுவதால் இந்த முடிவு என விளக்கமளித்துள்ள இளங்கோவன், அங்கு வாக்கு ஒன்றிற்கு ரூ. 5 ஆயிரம் பணம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடாதது திமுகவுக்கு சாதகமான முடிவா என்ற செய்தியாளரின் கேள்விக்கு,'இடைத்தேர்தலில் கூட்டணி குறித்து கூற இயலாது. 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது கூட்டணி குறித்து அறிவிக்கப் படும் என ஈ.வி.கே.எஸ். பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications