சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. மேடையில் முன் வரிசையில் குஷ்பு, நக்மா !
ராகுல்காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்ட மேடையில் குஷ்புக்கும், நக்மாவுக்கும் முன் வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது.
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குஷ்பு, நக்மாவுக்கு முன் வரிசையில் இருக்கை அளித்திருந்தது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழக முன்னாள், இன்னாள் தலைவர்கள் ஒன்று கூடி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பு, நக்மா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசரின் அருகில் அமர்ந்திருக்க, மேடையில் அனைவருக்கும் முன்பாக நக்மாவிற்கும், குஷ்புவிற்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்ளிட்டோருக்கு பின்வரிசையிலே இருக்கை அளிக்கப்பட்டது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.