இங்கிட்டு வாசன்... .அங்கிட்டு திருநாவுக்கரசர்... திமுகவில் ஒரே மல்லுக்கட்டு!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தமாகாவும் இடம்பெற முயற்சித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறுவழியில்லாமல் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தமாகா.
இரட்டை இலை சின்னத்தில்தான் தமாகா வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை விதித்தது. இதனால் அதிமுகவிடம் இருந்து விலகி தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் திமுக, அதிமுகவில் ஐக்கியமாகினர்.

லாபி ஒர்க் அவுட் ஆகலை
சட்டசபை தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் காங்கிரஸில் மீண்டும் ஐக்கியமாகிவிடுவது என முயற்சிகளை மேற்கொண்டார் ஜிகே வாசன். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சிக்னல் தரவில்லை. வாசன் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்... இதனால் வாசனின் எந்த ஒரு லாபியுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.

காங்கிரஸுக்கு எதிராக ஸ்டாலின்
சட்டசபை தேர்தலின் போதே காங்கிரஸுக்கு குறைவான இடம்தான் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர் முக ஸ்டாலின். ஆனாலும் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. ஆகையால் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸுக்கு பதில் தமாகாவை கூட்டணிக்கு கொண்டு வருவதில் மும்முரம் காட்டினார் ஸ்டாலின்.

கருணாநிதி நிலைப்பாடு இது
ஆனால் காங்கிரஸும் இருக்கட்டும்... தமாகாவும் இருக்கட்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடு. இதனால்தான் ஸ்டாலின்-வாசன் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரை கருணாநிதியும் சந்தித்து பேசியிருக்கிறார்.

காங்கிரஸில் எதிர்ப்பு
இச்சந்திப்புக்குப் பின்னர் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று திருநாவுக்கரசர் அறிவித்தார். இதற்கு காங்கிரஸில் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தை எதிர்த்து கட்சி தொடங்கிய வாசனுடன் எப்படி ஒரே கூட்டணியில் இருக்க முடியும் என காங்கிரஸில் அதிருப்தி குரல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி நெருக்கடியை எப்படி சமாளிப்பாரோ திருநாவுக்கரசர் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications