காங். வேட்பாளர்கள் பட்டியல் ரெடி.. இன்று மாலை வெளியீடு..!: யார் அந்த பலியாடுகள்?
சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் லோக்சபா வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றைப் பனை மரமாக மாறி தனியாக நிற்கிறது. யாரும் சேர்க்கவும் இல்லை. இவர்களாலும் யாரையும் கூட்டணிக்குக் கூட்டி வரவும் முடியவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டது. இன்று மாலை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
முதலில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸின்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான பெயர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த தலைவர்கள் பலரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கி விட்டனர். குறிப்பாக ஜி.கே.வாசன், தங்கபாலு ஆகியோர் போட்டியிடவில்லை. ப.சிதம்பரமும் தயங்குகிறார். எனவே புதியவர்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.