ஆர்எஸ்எஸின் ஏக சித்தாந்தம் நாட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்.. ராகுல் வீராவேசம்!
ஆர்எஸ்எஸின் ஏக சித்தாந்தம் நாட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்எஸ்எஸின் ஏக சித்தாந்தம் நாட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸின் ஒரே சிந்தனையால் இந்தியாவின் ஆயிரம் சிந்தனைகளை ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
கருணாநிதியின் வைரவிழாவுக்காக நேற்று வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சத்திய மூர்த்தி பவனில் கொடியேற்றி வைத்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.
அவர் பேசியதாவது, இந்தியாவில் பலதரப்பட்ட கலாசாரங்கள், சிந்தனைகள் உள்ளன. இந்தியாவின் பன்முக கலாச்சாரத்துக்கு பாஜக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. அதனை ஆர்எஸ்எஸ் சீர்குலைக்க முயற்சிக்கிறது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க விடமாட்டோம்.
தமிழக அரசை நடத்துவதே பாஜகதான்
தமிழக அரசை பணிய வைப்பது மட்டுமல்ல அரசை நடத்துவதே நாங்கள் தான் என கூறுகிறது பாஜக. ஆர் எஸ்எஸை நம்புபவர்கள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும் என்கிறது பாஜக.
திணிக்க முயற்சிக்கிறது ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸின் தலைமையகமான நாக்பூரில் இருந்தே இந்தியாவின் சிந்தாந்தம் தொடங்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆர்எஸ்எஸ் தனது ஒரே சிந்தாந்த்தை திணிக்க முயற்சிக்கிறது.
சிந்தனைகளை ஒழிக்க முடியாது
ஆர்எஸ்எஸின் ஒரே சிந்தாந்தத்தால் இந்தியாவின் ஆயிரம் சிந்தனைகளை ஒழிக்க முடியாது. ஆர்எஸ்எஸ், பாஜக திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட வேண்டும்.
ஆர்எஸ்எஸை முறியடிப்போம்
ஆர்எஸ்எஸின் திட்டத்தை முறியடிப்போம். ஆர்எஸ்எஸின் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். ஆர்எஸ்எஸால் பன்முக கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது.
எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது
பாஜக மட்டுமே நாடு முழுவதும் ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறது. எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என நினைக்கிறது பாஜக.