தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது: ஞானதேசிகன்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆலோசைனைக் கூட்டம் நேற்று காலை மாநிலத்தலைவர் ஞானதேசிகன் தலைமையில் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு திறம்பட பணியாற்றிடவும்,காங்கிரஸின் பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் அடுத்த வாரம் மேலிட தலைமையின் ஆலோசனைப்படி வெளியிடப்படும்.
மேலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் தமிழக அரசு மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு சரியான முறையில் செய்துவருகிறது.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.