வைகை அணை அருகே பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்
தேனி: வைகை அணை அருகே பாலம் கட்டுமாணப் பணியில் ஈடுபட்ட வடநாட்டு தொழிலாளர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார்.
வைகை அணை அருகே வைகையாற்றில் புதிய பாலம் கட்டுமாணப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இப்பால பணி ஒப்பந்தத்தை திண்டுக்கல் நிறுவனம் எடுத்துள்ளது. இதில் ஒரிஸாவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இக்குழுவை சேர்ந்த முனிராம் (38) என்ற இளைஞர் வெள்ளிக்கிழமை காலை பாலப்பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வலதுகாலில் முழங்காலுக்கு கிழே தீடீரென பொருள் வந்து தாக்கியதால் காயமடைந்தாராம்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை வைகை அணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இது தோட்டா போன்று உள்ளது என கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அறுவைசிகிச்சை செய்ததில் காலில் துப்பாக்கி தோட்டா எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வைகை அணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வைகை அணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் காலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.