கோவை சிங்காநல்லூரில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்.. சட்டசபையில் முக்கிய தகவல்
சென்னை: கோவை சிங்காநல்லூரில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் திட்டத்திற்கான மதிப்பீடு குறிப்புகளை, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளனர் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. துறை வாரியாக கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டு, விவாதங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

2024 மக்களவைத் தேர்தலின்போது, கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுகவைச் சேர்ந்தவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, வாக்குறுதி அளித்தபடி, கோவையில் கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியது திமுக அரசு. ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை மைதானத்தின் 20.72 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நில மாறுதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு கோவை தெற்கு தாசில்தார் கடிதம் எழுதினார். அதன்படி அந்த நிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தான் கோவை கிரிக்கெட் அரங்கம் தொடர்பான முக்கிய அப்டேட், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியாகியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் தொடர்பாக மதிப்பீடு குறிப்புகள் முன்மொழியப்பட்டது. இந்தியா, சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் மதிப்பீடு குறிப்புகளை முன்மொழிந்துள்ளனர். சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications