சென்னையில் திடீர் மழை... வெள்ளச்சேரியான வேளச்சேரி - மக்கள் அவதி!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமகக்ள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வேளச்சேரியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவதால் இதுவரை தண்ணீருக்காக சிரமப்பட்டு வந்த சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

அதேவேளையில் வெள்ளநீர் சில இடங்களில் வழிந்தோடாமல் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்பதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்த பிறகு, வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்ல குழி தோண்டி பெரும் குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் வழ்நிதோட திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.
சில மாதங்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இப்பணிகள் வேகமாக நடைபெற்றன. தற்போது உள்ளாட்சி தேர்தல் உடனே நடைபெற வாய்ப்பில்லை என்பதால் அப்பணிகள் மீண்டும் முடங்கியுள்ளன. இதனால், வேளச்சேரி தரமணி சாலையில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழைநீர் வடிகால் வசதி சரிவர இல்லாத காரணத்தால் மடிப்பாக்கம், உள்ளகரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று தொற்றுநோய்களை உண்டாகும் ஆபத்து உள்ளது
மழை காரணமாக கிண்டி அண்ணா பல்கலை கழக வாளாகத்தில் நீர் தேங்கி நின்றது. மயிலாப்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது.
பெரு வெள்ளத்தை எதிர்கொண்ட பிறகும் வடிகால் வசதியின்றி சென்னை நகரில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக் குழந்தைகளும் முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் முன்பாக வெள்ளநீரை அகற்ற வேண்டும் என்பது வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications