ஊசலாடும் பயணிகளின் உயிர்.. "செல்"லில் பேசியபடியே பஸ் ஓட்டிய தற்காலிக ஓட்டுநர்...!
பயணிகளின் உயிரை பற்றி கவலைப்படாமல் செல்போனில் பேசியபடி தற்காலிக பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கனார்.
திருச்சி: பெரம்பலூரில் செல்போனில் பேசியபடி அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுனர் ஒருவர் இயக்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை.
எஞ்சிய பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.
பேருந்துகளை இயக்கி வருகிறது
தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவது பாதுகாப்பு அல்ல என்று போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. எனினும் அதை பற்றி கவலைப்படாமல் அரசு அவர்களை வைத்தே பேருந்துகளை இயக்கி வருகிறது.
திருச்சி பதிவு எண்
பெரம்பலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 40 சதவீத பேருந்துகளே இயங்கி வருகின்றன. சில பேருந்துகளில் தற்காலிக ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெரம்பலூர்- ஆத்தூர் வழித்தடத்தில் திருச்சி பதிவு எண் கொண்ட ஒரு பேருந்தில் தற்காலிக ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கினார்.
ஸ்டியரிங்கை விட்டு விட்டு...
சுமார் 15 நிமிடங்களாக அவர் பேசியதை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இடது கையில் செல்போனை பேசும் அந்த ஓட்டுநர் ஸ்டியரிங்கை விட்டு விட்டு பேருந்தை இயக்கினார். வலது கையால் கியர் போடும் போது ஸ்டியரிங்கை அவர் விட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
டிக்கெட் வசூலிக்கும் காட்சி
திருச்சி மணப்பாறையிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கினார். இந்நிலையில் பேருந்தை ரிவர்ஸ் எடுக்கத் தெரியாமல் திணறிய அவர் ஒரே இடத்தில் ஒரு மணி நேரமாக வட்டமடித்தார். அதுபோல் மஞ்ச பையில் லுங்கி கட்டிக் கொண்டு டிக்கெட் வசூலிக்கும் காட்சிகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.