குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி.... சுற்றுலா பயணிகள் உற்சாகம்
உதகமண்டலம்: கோடை வெயிலுக்கு இதமாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் குளு குளு சீசன் தொடங்கியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கோடை சீசனையொட்டி, ஆண்டுதோறும் நீலகிரியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி காண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், குன்னூரில் பழக்கண்காட்சியும் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

பழக்கண்காட்சி
கண்காட்சியில் சிறப்பம்சமாக 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களால் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் அலங்கரிக்கபட்டுள்ளது. 10 அடி அகலமும், 25 அடி உயரமும் கொண்ட இந்த கலங்கரை விளக்கம் சுற்றுலாபயணிகளை கவர்ந்துள்ளது.

பயணிகள் பரவசம்
இதேபோன்று 1000 கிலோ எடை கொண்ட திராட்சை, பிளம்ஸ், மாதுளை ஆகியவைகளால் செய்யப்பட்ட பாய்மரக்கப்பல் பயணிகளை பரவசப்படுத்தியது. 500 கிலோ எடையில் மாம்பழக்குதிரையும் ரசிக்கும்படி உள்ளது.

தோட்டக்கலை அரங்குகள்
கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுகல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து தோட்டகலை சார்பில் காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மா, பலா, வாழை, திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் வனப்பகுதியில் விளையும் அரிய வகை பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் வருகை
இது தவிர பார்வையாளர்களை கவர பல வண்ணங்களில் மலர்கள் கொத்துக்கொத்தாக வைக்கப்பட்டுள்ளன. குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியை காண வெளியூர், வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இரு தினங்கள் கண்காட்சி
பழக்கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த பழக்கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications