கூவம் ஆற்றை தெறிக்க விட்ட மழை... மீண்டும் "புனிதமடைந்தது".. படகு விடலாமா?
சென்னை: கூவம் ஆறு எனப் பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும், இந்நாள் வரை அது சாக்கடையாகத் தான் வாழ்ந்து வந்தது. ஆனால், சமீபத்திய மழையால் மீண்டும் "நதி" என்ற அந்தஸ்தைப் பெற்று கம்பீரமாக வலம் வருகிறது கூவம்.
சென்னை நகரில் பாயும் இரண்டு ஆறுகளில் ஒன்று கூவம். இன்னொன்று அடையாறு. முன்னர் ஒரு காலத்தில் கூவத்தில் படகு போக்குவரத்து நடைபெற்றதாகவும், மீன் பிடி தொழில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் கழிவு நீர் அதிகளவில் கலந்து தற்போது சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கிறது கூவம்.

கூவம்...
சினிமாக்களில் கூவம் என்றால் சாக்கடை தான் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டனர். அருவருக்கத்தக்க வகையில் பேசுபவர்களை ‘கூவம்' எனத் திட்டும் வழக்கமும் சென்னை மக்கள் மத்தியில் உள்ளது.

சுனாமியில் நீச்சல்...
சுமார் 65 கிமீ ஓடும் இந்த கூவம் நதியானது, ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு சுனாமி காரணமாக தூய்மையானது. ஆனால், அதனை அப்படியே காத்துக் கொள்ளத் தெரியாத மக்களால் மீண்டும் அது கறுமை நிறத்திற்கு மாறியது.

மிதக்கும் சென்னை...
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின் பல இடங்களில் மழை நீர் வெள்ளமென சூழ்ந்தது.

தவிக்கும் மக்கள்...
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது.

மீட்பு...
பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இவ்வாறு பலத்த சேதத்தை உருவாக்கிய கனமழையால் சென்னைக்கு ஒரு நன்மையும் கிடைத்துள்ளது.

மீண்டும் நதியானது...
ஆம், மீண்டும் கூவம் தூய்மையாகி நதியாகியுள்ளது. இதனை இவ்வாறே தொடர அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நலம். கூடவே, விரைவில் சென்னையில் படகு போக்குவரத்தையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications