வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்க கோவை மாநகராட்சி திட்டம்: மக்கள் எதிர்ப்பு!
வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை: கோவையில் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மாநகரப் பகுதிகளில் தனி நபர் வாகன பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது வாடிக்கையாகி விட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சி
இதற்காக மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது, வணிக கட்டிடங்களில் பார்க்கிங் வசதிகளை கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டியதை தவிர்த்து , தற்போது அனைத்து பகுதிகளிலும் வாகனம் நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி டெண்டர் விட்டு இருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மீண்டும் கட்டணவசூல் முறை
கோவை மாநகரத்தில் உள்ள ஒப்பணக்கார வீதி , கிராஸ் கட் சாலை, வைசியாள் வீதி உளிட்ட 28 சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டண முறையை அமல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 1996 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சி நடந்த போது, கன்ஸ்யூமர் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடுத்தி நிறுத்தியது. தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என அந்த அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சிக்கு உரிமையில்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் நோ பார்க்கிங் அமைக்காமல் தற்போது பார்கிங் கட்டணம் வசூலித்தால் மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் தற்போது இந்த திட்டம் துவங்க கூடாது என கூறி உள்ளனர்.

முறைகேடுகள் நடக்க வாய்ப்பு
மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இருக்கும் சூழலில் இரு சக்கர வாகனத்திற்கு எந்த மாநகராட்சியும் கட்டணம் வசூலிக்காத நிலையில், வருவாய்க்காக கோவை மாநகராட்சி பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறி உள்ளனர். மேலும் டெண்டர் விட்டு கட்டணம் வசூலித்தால் முறைகேடுகள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி என்று பணம் பறிப்பு
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் , தற்போது இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், இதற்கென பிரத்யேகமாக ஆப் உருவாக்கப்பட்டு அதன் மூலம் எந்த சாலையில் வாகன நிறுத்த இடம் உள்ளது என்பதை வீட்டில் இருந்து புறப்படும் போதே தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்திய பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகளின் அனுமதி பெற்றவுடம் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சாலைகளில் மாநகராட்சியினர் கட்டணம் வசூலிக்க அதிகாரம் உள்ளதா என ஆய்வு செய்வதாக குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications