For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்கலை.ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்

பாரதியார், மனோன்மணியம் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனங்களை தமிழக ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பாரதியார், மனோன்மணியம் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக ஆளுநர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் முறைகேட்டைத் தடுக்க வேண்டும் என குரல் எழுப்பிய போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது.

Corruption in the appointment of university professor - Ramadoss

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 64 பணியிடங்கள், இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் 12 உதவிப் பேராசிரியர்கள், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 பணியிடங்கள் ஆக மொத்தம் 130 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் முதல் நேர்காணல்கள் நடைபெற்று வந்தன.

இதற்கான நடைமுறையில் பெருமளவில் ஊழலும், முறைகேடுகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்; நேர்மையான கல்வியாளர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைத்து பேராசிரியர்கள் நியமனத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், பேராசிரியர்கள் நியமன ஊழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், அந்த ஊழலுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் துணையாக இருந்திருக்கின்றனர். அவர்களின் ஆதரவுடன் இரு பல்கலைக்கழகங்களிலும் 130 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. இதற்கான நேர்காணல்களில் பங்கேற்றவர்களிடம் துணைவேந்தர்களின் முகவர்கள் தொலைபேசியிலும், நேரிலும் பேரம் பேசி உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம், இணைப் பேராசிரியர் பணிக்கு ரூ.50 லட்சம், பேராசிரியர் பணிக்கு ரூ.60 லட்சம் என வசூலித்திருக்கின்றனர். மொத்தமுள்ள 130 பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் ரூ.60 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் அனைத்து மட்டத்திலும் பணம் விளையாடியிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்கள் நியமனத்திற்காக நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்களிடம் பேரம் பேசப்படுவதை சுட்டிக்காட்டி கடந்த 16-ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, இப்பிரச்சினையில் தலையிட்ட உயர்கல்வித்துறை அமைச்சரும், செயலரும் பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக கடந்த 19-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சிக்குழு கூட்டத்தை ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை உயர்கல்வித்துறை செயலாளர் ஏ. கார்த்திக் கடந்த 21-ஆம் தேதி சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார். இதனால், பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செய்யப்படும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், உயர்கல்வித்துறை செயலாளரை சென்னையில் சந்தித்து விட்டு கோவை திரும்பியதற்கு அடுத்த நாளே, அதாவது கடந்த 22-ம் தேதி அன்று பல்கலைக்கழக ஆட்சிக்குழுவைக் கூட்டி 76 ஆசிரியர்கள் நியமனத்திற்கும் ஒப்புதல் வாங்கியிருக்கிறார். அதேபோல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தை 21ஆம் தேதி கூட்டி 54 ஆசிரியர்களின் நியமனத்திற்கு அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கரன் ஒப்புதல் பெற்றிருக்கிறார்.

பாரதியார் பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பாக 19-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சிக்குழு கூட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும் ரத்து செய்யும்படி ஆணையிட்டதன் நோக்கம் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை களைவது அல்ல என்றும், அதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் அனைத்து நிலைகளில் உள்ளவர்களுக்கு உரிய பங்கு வழங்கப்படுவதை உறுதி செய்வது தான் என்றும் அந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். இதற்காகத் தான் துணைவேந்தரை உயர்கல்வித்துறை செயலாளர் அவசரம் அவசரமாக சென்னைக்கு அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனம் தொடர்பாகவும் துணை வேந்தர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடையே எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தூண்களை உருவாக்கும் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தும்படியும் எச்சரிக்கை விடுத்த பிறகும் ஊழலை ஒழிக்காமல், ஊழல் பணத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக உயர்கல்வித்துறையை உயர்ஊழல் துறை என அழைக்கும் அளவுக்கு அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது. இது உயர்கல்வியை வளர்க்காது; மாறாக, சீரழித்து விடும்.

எனவே, இந்த பிரச்சினையில் தமிழக ஆளுநர் உடனடியாக தலையிட்டு 2 பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss asks CBI Investigation to appointment of university professor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X