மனைவியை எம்.எல்.ஏ.வாக்க கொள்ளையடித்தேன்... தேமுதிக கவுன்சிலரின் கணவர் 'திடுக்' வாக்குமூலம்
சென்னை: தேமுதிக கவுன்சிலராக இருக்கும் மனைவியை எம்.எல்.ஏவாக்குவதற்காக கொள்ளையில் இறங்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த லட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரதேவன் (வயது 82). கடந்த மாதம் அவரது வீட்டுக்கு வந்த மர்மநபர் ஒருவர், தன்னை மாநகராட்சி அதிகாரி என்றும், வீட்டு வரி ரசீதை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

இதன் பின்னர் 2 நாட்கள் கழித்து பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள் திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குமாரதேவன் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சம்பவத்தன்று மாநகராட்சி அதிகாரி போல் வந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து குமாரதேவன் வீட்டில் இருந்து 45 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சுத்திப்பட்டுவை சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான கணேஷிடம் போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. தனது மனைவியை எம்.எல்.ஏ. ஆக்கவே கொள்ளையடித்ததாக பரபரப்பு தகவலை கணேஷ் தெரிவித்தார்.
அதாவது கணேஷின் மனைவி சுவீதா, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய தே.மு.தி.க. கவுன்சிலராக உள்ளார். அவரை எப்படியும் எம்.எல்.ஏ.வாக்கிவிடுவது என்பதற்காக சென்னையில் முகாமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார் கணேஷ்.
கொள்ளையடித்த நகைகளை விற்று பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் பணத்தை வாரி இறைத்து மக்களை வளைத்துப் போட்டிருக்கிறார். எந்த ஊரில் இருந்து நன்கொடை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அள்ளி வீசியிருக்கிறார்.
இப்படியெல்லாம் செய்தால் சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போடுவார்கள் என்பது கணேஷின் ப்ளான். ஆனால் தற்போது போலீசில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இந்த கொள்ளைகளில் சுவீதாவுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications