அண்ணா பல்கலையில் பி.இ கலந்தாய்வு தொடக்கம்... விரும்பிய கல்லூரி கிடைக்குமா?
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 பொறியியல் இடங்கள் கலந்தாய்வு முறையில் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக ஒரு லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஜுன் 22ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி இன்று தொடங்கியுள்ள கலந்தாய்வில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்த 19ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வும், 21ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 23 முதல் ஆகஸ்ட்டு 11 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
இன்று தொடங்கி நாளை வரை நடைபெறும் தொழில்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மூலம் 6 ஆயிரத்து 224 இடங்கள் நிப்பப்பட உள்ளன. பொதுப்பிரிவு கலந்தாய்வுமூலம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 419 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 204 இடங்கள் உள்ளன. இவற்றில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 65 சதவீத இடங்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.